Friday, February 19, 2010

"வயிற்றுக்குச் சோறு" -V.ROHINI

அம்மா ஒரு முழம் பூவாவது வாங்குங்கம்மா! காலையிலயிருந்து எதுவுமே போணியாகலே.. வாங்கீட்டு போங்கம்மா..!"
போகிற வருகிற ஜனங்களிடம் எவ்வளவோ தூரம் கெஞ்சிப் பார்த்து விட்டாள் காமாட்சி. ஆனால் எவரும் அதற்கு இணங்குவதாகத் தெரியவில்லை. இவளுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. தொண்டைத் தண்ணி தான் வற்றிப்போது.
"நீயே ஒரு அமங்கலி! உங்கையால வாங்கி பூவச்சா என் குடும்பம் உருப்பட்டாற் போலத்தான்!" அனலாக தகித்த வார்த்தை. 'ஒரு கால் ஊனமானவள். பாவம் எங்கே போய் ஓடியாடி வேலை செய்வாள்?' என்று பரிதாபப்பட்டு போனமாதம் வரை நம்மிடம் பூ வாங்கின மனுசங்க கூட எப்படி மாறிப் போனார்கள்?
வெறுப்பு மேலிடத் தன்னையே பார்த்துக் கொண்டாள் காமாட்சி. போலியோவால் பாதித்து சூம்பிப் போன கால்களை விட அவள் உடுத்தியிருந்த வெள்ளைச்சேலை பெரிய ஊனமாகப்பட்டது. பூச்சுடாத கூந்தல், குங்குமமிடாத நெற்றி. எப்படியெல்லாம் பாடாய் படுத்துகிறது. கணவன் இல்லாதது அவ்வளவு பெரிய ஊனமா?
நன்றாக ஓடியாடி கட்டிட வேலை செய்து வந்த மனுஷன் ஒரு நாள் அப்படியரு நோயில் விழுவான் என்று கனவா கண்டோம்?
சிக்குன் குனியாவாம். முதலில் அவனுக்கு வந்து முடக்கிப் போட்டது. அடுத்ததாக ஐந்து வயதுப்புள்ளை. அதற்கடுத்ததாக இவள். ஒரு வாரக்காய்ச்சல். தர்மாஸ்பத்திரியில் ஊசி, மருந்து போட்டதில் அவளால் முதலில் எழுந்து உட்கார மட்டுமே முடிந்தது. பாடுபட தெம்பில்லை. பிறகு தான் இவர்களும் படுக்கையில் விழுந்தார்கள். எப்போதும் வீட்டு வாசலில் பூக்கட்டி விற்கும் காமாட்சியின் தொழிலை உட்கார்ந்து கொண்டே புருஷனை செய்ய வைக்கலாம் என்று பார்த்தால், மார்க்கெட்டில் 'பூ' வாங்கி வரக் கூட அவருக்கு தெம்பில்லை. அதை விட 'பூ' வாங்க பணமுமில்லை.அதையும் மீறி பசி. 'ரொம்ப பசிக்குது. வயிறு பாடாப்படுத்துத காமாட்சி. ஏதாவது செய்யேன்!'
பிள்ளை ஏற்கனவே சுருண்டிருந்தான். சேகரித்து வைத்திருந்த பணமும் போனவாரம் தர்மாஸ்பத்திரிக்கு அலைந்ததில் காணாமல் போய் விட்டது.
தீராத மூட்டு வலியிலும் எழுந்து அக்கம் பக்கம் தவழ்ந்து கொண்டே உதவி கேட்டுப் பார்த்தாள். 'ஒரு வாய் சோறாவது போடுங்கம்மா!' என்று ஒரு கிண்ணத்தை நீட்டியதில் மூன்றாவது வீட்டில் கொஞ்சமாவது சோறு கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு வந்த போது, படுத்திருந்த புருஷனின் மீது 'ஈ' மொய்த்துக்கொண்டிருந்தது.
அதைப் பார்த்து. இவள் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர்.
ஒரு குவளை சாதத்திற்கு மூஞ்சியை சுளித்தவர்கள் கூட. அட பாவமே செத்துட்டானே!' என்று சொல்லி ஆளாளுக்கு அடக்கம் செய்ய பத்து, இருபது கொடுத்து உதவி செய்தனர்.
அதன் பிறகு இவளும், இவள் பிள்ளையும் அந்த நோயிலிருந்து மீண்டதே மிகப்பெரிய விஷயம்தான். அன்றாடம் வரும் கந்துக்காரனிடம் நூறு ரூபாய் பெற்று 'பூ' வாங்கி தொடுத்து வழக்கம் போல் கடை விரித்தும் வைத்தாள். ஆனால் ஒரு ஆள் கூட 'பூ' வாங்கவில்லை. கேட்டால் 'அமங்கலி' என்பார்கள். எங்கையால வாங்கினா விளங்காதாம்!
'புருஷனைப் போல் பட்டினியாலேயே செத்துப் போயிருக்கலாம்!' என்று தோன்றியது. கண்ணீன் ஓரத்தில் நீர் தேங்கி நிற்க, "திடீரென அம்மா...அம்மா... எனக்கு வயிறு பசிக்குதுமா"...குரல் கேட்டு திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தாள் காமாட்சி. அஞ்சு வயசு பிஞ்சு மகனின் குரல் வாசலில் தொடுத்து வைத்திருந்த 'பூ' முற்றிலும் வாடியிருந்தது.
குடிசைக்குள் தவழ்ந்து சென்றாள். உள்ளே இருந்த குண்டாவை எடுத்தாள். புருஷனுக்கு கடைசியாய் சோறு வாங்கப்போன அதே குண்டா. அதே மூன்றாவது வீடு. இவள் குரலைக் கேட்டதும் அந்த வீட்டுக்காரி எரிந்து விழுந்தாள். சோறும் இல் ஒன்னும் இல்ல..போ..போ என்று அடிக்காத குறையாக விரட்டி அடித்தாள்
அடுத்த வீடு. அதற்கடுத்த வீடு. எல்லாக்கவுகளும் அடைக்கப்பட்டன. அதற்கு மேல் தவழ உடலில் சக்தியில்லை. எந்தப் பாதையும் தெரியவில்லை. குத்து மதிப்பாகத் தன் குடிசையை நோக்கி தவழ்ந்தாள்.
அங்கே 'வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கே வாழும் மனிதருக்கெல்லாம்!' என்று அவளது மகன் பிஞ்சுக் குரலில் பாடம் படித்துக் கொண்டிருந்தான். அவளின் கண்களில் மேலும் இருட்டுக் கட்டியது.
தன்னை முடக்கியது எது? பிறப்போடு வந்த உடலின் ஊனமா அல்லது புருஷன் செத்ததுக்காக தன்னைப் பட்டினி போடும் சமூகமா என்றெல்லாம் யோசிப்பதற்குக்கூட தெம்பு கூட இல்லாதவளாக அவளது கண்களைக் கவ்விய இருட்டை பொங்கிய கண்ணீர் துடைக்க முயன்று கொண்டிருந்தது.

மிக வேகமாக பறக்கும் ஹம்மிங்... - V.ROHINI

உலகின் மிக வேகமாக பறக்கின்ற பறவை பெரிக்ரேயன் வால்கன் என நீண்ட நாட்களாக கருதப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது வெளிவந்த ஆய்வில் உலகின் மிகச்சிறிய பறவையான ஹம்மிங் பேர்ட் தான் அதிவேகமாக பறக்கின்ற பறவை என தெரிய வந்துள்ளது. இப்பறவை தோற்றத்தில் சிட்டுக்குருவியைப் போன்று மிக அழகாக இருக்கும். அண்மையில் அதிவேகமாகப் பறக்கும் பறவைகள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வொன்றில் இந்த ஹம்மிங் பறவை தான் அதிவேகமாக பறக்கும் பறவை என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஹம்மிங் பறவையின் அலகு முதல் வால் வரையான மொத்த நீளமே 57 மில்லி மீட்டர்தான்.
பொதுவாக சூரியனை நோக்கியே பறக்கும் தன்மை கொண்ட இப்பறவையின் தலைப்பகுதி சூரிய வெளிச்சத்தில் பல வண்ணங்களில் மின்னும் தன்மை கொண்டது. இந்த பிரதிபலிப்பை கொண்டு ஆய்வு செய்ததில் ஹம்மிங் பறவை வினாடிக்கு 90 அடி பறப்பது தெரிய வந்துள்ளது.
ஹம்மிங் பறவை. அதன் சிறகுகளை அசைக்கின்ற வேகம் மட்டுமே வினாடிக்கு 50 முதல் 60 தடவைகளாகும். அதுமட்டுமா? சாம்பல் நிறமுடைய திமிங்கலத்தின் இதயம் நிமிடத்திற்கு ஒன்பது தடவை தான் துடிக்கின்றது. ஆனால் ஹம்மிங் பறவை வானில் வேகமாக பறக்கும் போது அதனுடைய இதயம் நிமிடத்திற்கு 1200 தடவை துடிக்கின்றதாம்.
உலகின் மிக வேகமாக பறக்கும் பறவை என்று கருதப்பட்ட பெரிக்ரேயன் வால்கனின் வேகம் வினாடிக்கு 229 அடி. அதாவது 70 மீட்டர் ஆகும்.
இந்த பெரிக்ரேயின் வால்கனை விட ஹம்மிங் பறவை ஒரு வினாடியில் கடக்கும் தூரம் குறைவு தான் என்றாலும் உருவத்தை ஒப்பிடுகையில் ஹம்மிங் பறவையின் வேகம் மிக அதிகமாகும். அதாவது ஒரு நிமிடத்திற்கு தனது உடல் நீளத்தை காட்டிலும் 385 மடங்கு தூரம் ஹம்மிங் பறவை பறக்கிறது. ஆனால் வால்கன் பறப்பது வெறும் 200 மடங்கு மட்டுமே.

பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியதா தீக்கோழி? -V.ROHINI

பறப்பதாலேயே பறவை என்று பெயர் வந்தது. ஆனால் பறக்காத பறவை இனங்களும் உலகத்தில் உண்டு. ஏறத்தாழ 40 வகையான பறக்காத பறவைகள் உள்ளதாக பறவையியலாளர்கள் கூறுகின்றனர். இதில் நெருப்புக்கோழி அல்லது தீக்கோழி, ஈமு. கிவி, பென்குயின் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் மிகப்பெரிய பறவை தீக்கோழியாகும்.
பொதுவாக பறக்காத பறவையினங்கள் பறக்கும் மூதாதையரில் இருந்து தோன்றியவையாகும். மூதாதை பறவைகள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து உணவு தேடி நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருந்திருக்காது. அதனால் அவை அதிக தூரம் பறக்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது. எதிரி விலங்குகள் அதிகம் இல்லாத பகுதியில் அவை வசித்திருக்கக் கூடும். ஆபத்துகள் இல்லாததால் அவை தற்காத்துக் கொள்வதற்காகக் கூட பறக்க வேண்டி இருந்திருக்காது. இவ்வாறு பறப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்ததால் அவை இறக்கைகள் இருந்தும், பறப்பதற்கான தன்மை இருந்தும் பறக்காமல் இருந்துள்ளன. காலப்போக்கில் இப்பண்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டு பறக்கும் தன்மையை ஏறக்குறைய இப்பறவைகள் இழந்தே விட்டன.
ஆனால் தீக்கோழியைப் பொறுத்தவரை கதையே வேறு. மேற்கண்டவையே இப்பறவையினம் பறக்காததற்கும் காரணமாக இருக்கலாம். அத்துடன் வேறொன்றும் சேர்ந்துள்ளது. தீக்கோழி பறவைகளிலேயே மிகவும் வலுவானது. அதன் கால் நகங்கள் எதிரிகளைக் குத்திக் கிழிக்க வல்லவை. எனவே எதிரிகளைப் பற்றிய பயமில்லாத காரணத்தாலும் அவை பறக்காமல் இருந்திருக்கலாம்.
'தீக்கோழி' பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றிய இனம். ஆனால் தீக்கோழி தன்னைக் கொன்று உண்ணும் உயிர்களற்ற பிரதேசங்களில் வாழ்ந்தமையாலோ என்னவோ தனது பறக்கும் ஆற்றலை இழந்து விட்டது.
இப்பறவை 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது. குறைந்தது அணிக்கு 65 கிமீ வேகத்தில் ஓடக் கூடியது. இந்த தீக்கோழிகள் பார்ப்பதற்கு கங்காரு வடிவத்தை போன்று இருக்கும். நீண்ட கழுத்தையும். கால்களையும் பெற்றிருக்கும் தீக்கோழிகள் இறகு. தோல் மற்றும் இறைச்சிக்காக பண்ணைகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் அவற்றின் இறகுகள் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தீக்கோழிகள் அடைகாக்கிறபோது முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன.முட்டைகளை பகல் நேரத்தில் பெண் தீக்கோழியும், இரவு நேரத்தில் ஆண் தீக்கோழியும் அடைகாக்கின்றன. சாதாரண கோழிகளில் பெண் கோழிதான் எப்போதும் அடைகாக்கும். ஆனால் இந்த தீக்கோழிகளில் ஆண் கோழியும் அடை காக்கின்றது என்பது உண்மையிலேயே வியப்பானதுதான் அல்லவா? ஏதோ அவற்றிற்காவது இந்த சமத்துவ உணர்வு இருக்கிறதே!
பறவை முட்டைகளில் மிகப்பெரியது தீக்கோழி.

கோவையின் சிறப்பு சிறுவாணி குடிநீர் ---V.ROHINI

கோவை என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது இரண்டு மட்டுமே. ஒன்று சுவையான சிறுவாணி குடிநீர், மற்றொன்று ஆண்டு முழுவதும் அருமையான சீதோஷ்ண நிலை.
சிறுவாணி நீர் கோவைக்கு முழுமையாகப் பயன்படும் குடிநீர் ஆதாரம் ஆகும். சிறுவாணி குடிநீர்த் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரித்து வருகிறது. விரைவில் கோவை மாநகராட்சி இதனை எடுத்து நடத்த முயன்றுவருகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுவாணி உற்பத்தியாகி கேரள எல்லையில் அணைக்கட்டு கட்டி அங்கிருந்து குழாய்கள் மூலம் கோவை நகருக்குக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இது கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிறுவாணி குடிநீர் உலகிலேயே இரண்டாவது சுவையான குடிநீராகக் கருதப்பட்டு வருகிறது.

கொடுங்கோன்மை சமூகத்தில் வரதட்சணைக் கொடுமை! -V.ROHINI

'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!'என்று பாடினான் புரட்சிக்கவி பாரதி. அவர் பாடி ஆயிற்று ஆண்டுகள் பல! ஆனால் இந்தியப்பெண்கள் இன்றளவும் வெறும் கூழுக்கும். சோற்றுக்கும், நகைக்கும், நட்டுக்கும், சீருக்கும், சிறப்புக்கும், கொடுமைப்படுத்தப்படும் சங்கதிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இத்தகைய கொடுமையின் உச்ச கட்டத்தில் கணவனே மனைவியை மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொல்லுதல், மாமியாரே மருமகளை அடித்துச் சாகடித்தல், மாமனாரும், கொழுந்தனும் தன் வீட்டு மருமகளைச் சித்திரவதை செய்து நாசக் காடாக்குதல் போன்று பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வது அன்றாடச் செய்திகளாய் நாளிதழ்களில் வருகின்றன.
'பெண்ணிங்கு வாழ்ந்து ஆவதென்ன?பெருங் கொடுங் கோலர்கள் மத்தியிலே மாய்ந்தென்ன வீழ்ந்தென்ன?என்று ஓங்காரக் குரல் எடுத்து அழ வேண்டும் போல் இருக்கிறது.
இச்சமுதாயத்தில் பெண் கொடுமை என்பது வரதட்சணை வடிவில் மட்டும் வந்ததல்ல! பால்ய திருமணம், உடன் கட்டை ஏறுதல், பலதாரமணம், பொட்டழித்து பூவழித்து விதவைக் கோலம் ஆக்குதல், பெண் சிசுக்கொலை என்று எத்தனை எத்தனை கொடுமைகள்? அதன் உச்ச கட்ட நவீனக் கொடுமைதான் வரதட்சணை. இதனை தடுக்க சட்டங்களும் உண்டு சம்பிரதாயங்களும் உண்டு, மனித நேயக்கோட்பாடுகளும் உண்டு.
'ஆயிரம் இருந்தென்ன கொடுமைகள்தான் ஓயவில்லை'
ஒரு காலத்தில் பெண் என்பவள் ஆண்களுக்கான ஆடுகளத்தில் போகப் பொருளுக்கான முழு அம்சமாக இருந்தாள். இப்போதும் ஏறத்தாழ அப்படித்தான் இருக்கிறாள். முன்பு ஓர் அரசன் ஒரு பெண்ணை மட்டும் அல்ல, நூறு பெண்களைக் கூட மணப்பான். அவர்களை அந்தப்புரங்களில் 'அம்போ என்று விட்டு விடுவான்.
எதிரிநாட்டு அரசன் நாட்டை நோக்கி படையெடுக்கும் போது, படைகளை துவம்சிப்பதுடன், அரண்மனைகளை சூறையாடுவதுடன் ஆநிரைகளையும், பான், பொருள், ஆபரணம், வைரம் வைடூரியங்களையும், நவரத்தினங்களையும், கொள்ளையடிப்பதுடன் முழு முதலாவதாக அந்தப்புரப்பெண்களை சூறையாடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் பின் விளைவு! எதிரி நாட்டு அரசன் வரும் முன்பு அரண்மனைக்குள் உட்புகும் முன்பே அந்தப்புரத்தில் பெரும் தீ மூட்டி அத்தனை பெண்களும் தீக்கிரையாகுவது நம் நாட்டின் சாபக்கேடாயிருந்தது.
அரசன் வம்சாவழியில் இப்படியென்றால் குடிமக்களின் வழியும் அவ்வழியே இருந்ததில் ஆச்சர்யம் என்ன? இதில் அந்தப்புரம் இருக்காது. ஆனால் பலதாரங்களை மணந்து கொள்வான். தாயானாலும், கட்டிய மனைவியானாலும், மகளானாலும், அவள் ஆணைச் சார்ந்தே பிழைக்க வேண்டும்.
இச்சமூகத்தில் ஆண்தான் எல்லாம் கணவன் இறந்தால், மனைவி பொட்டழித்து, பூவழித்து, கணவனின் எரியும் சிதையிலேயே உடன் கட்டை ஏற வேண்டும். ஆங்கிலேய பிரபுக்களின் ஆதிக்கம் எழுந்தது. மன்னராட்சிகள் படிப்படியாய் ஒழிந்தன. அந்நியரிடம் நாட்டை மீட்கும் முகமாக சுதந்திரப் போராட்டங்களும் எழுந்தன.
பால கங்காதர திலகர் முதற்கொண்டு வங்கச் சிங்கம் லாலா லஜபதிராய், ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, வ.உ.சி, பாரதியார் உள்ளிட்ட பல தலைவர்கள் எழுந்தனர் முழங்கினர். நாடெங்கும் சுதந்திர வேட்கை தவழ்ந்த வேலையில் பெண்களுக்காகவும் ஒரு குரல் கீச்சிட்டது. அது பாலகங்காதர திலகர்தான். 'கைம்பெண் முறை ஒழிய வேண்டும், உடன்கட்டை ஏறும் வழக்கம் அழித்தொழிக்கப்பட வேண்டும், இல்லையெனில் அதில் நானும் தீக்குளியல் நடத்துவேன்' என்று ஓங்காரக்குரலெடுத்து முழங்கினார் அவர். இதில் வடநாடு கதி கலங்கியது. முழங்கியது சாதாரணத்தலைவரா? இந்தியத் தேசத்து சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கும் தலைவர் அல்லவா? அவரின் அந்த கர்ண கடூரக் குரலால் நாடேஅவர் பக்கம் சாய்ந்தது. உடன்கட்டை தடைச்சட்டம் இயற்றப்பட்டது. அதனால் அவ்வழக்கம் படிப்படியாய் ஒழிந்தது.
'அப்பாடா! பெண் கொடுமை ஒழிந்ததடா' என்று நெஞ்சு நிமிர்ந்த வேளையில் பெண்களுக்கு மற்ற கொடுமைகள் அப்படியே இருந்தன. கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண் சீர், சிறப்புகளுடன் கட்டு கட்டாய்ப் பணமும் கொண்டு வர வேண்டும். எனவே பெண்களுக்கான கொடுமைகள் படிப்படியாய் நீக்கப்பட சட்டத் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டது.
மகளிர் நீதி மன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் 90 விழுக்காடு ஆண் மகனால் வரதட்சணைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் வழக்குகளே! மகளிர் காவல் நிலையங்களில் அன்றாடம் பதிவாகும் வழக்குகளில் பெரும்பாலானவை வரதட்சணைக் கொடுமை புகார்களே! 'அப்பா வீட்டில் டூவீலர் வாங்கி வரச்சொல்லி தொந்தரவு செய்தான் கணவன்', 'உன் அம்மா இந்த வயசுல நக போட்டுட்டு மேனா மினிக்கிட்டு இருக்காளே! அவளுக்கு எதற்கு நகை, போயி பத்து பவுனு வாங்கிட்டு வா, இல்ல அதோடு ஒழிஞ்சுடு' என்று விரட்டியடித்த மாமியார், 'உங்கப்பா சொத்து பூராவும் எம்புள்ள பேருக்கு மாத்தி எழுதச்சொல்லு! விரட்டும் மாமனார். இப்படி எத்தனை புகார்கள், காவல் நிலையப்படிக்கட்டுகளை மிதிக்கின்றன என்பதைக் கணக்கிட முடியாது.
'கருவிலேயே பெண் சிசுவைக் கொன்றால் 2 வருடம். தொப்புள் கொடி அறுக்காமலே பிள்ளையைக் கொன்றால் 5 வருடம் கடுங்காவல்!' என்றெல்லாம் சட்டங்கள் இருக்கின்றன. மருத்துவ மையங்களில் கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் இருக்கும் கரு ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து கண்டு பிடித்து முன் கூட்டியே சொல்வது சட்ட விரோதம் என்று தடை செய்திருக்கிறது அரசு அத்தோடு மட்டுமா?
ஒரு பெண் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறாக இறக்க நேரிட்டால் அதை சந்தேக மரணம் என்றே கணக்கில் கொள்கிறது சட்டம். பெண்ணின் பெற்றோர் 'ம்'...என்று ஒரு வார்த்தை அவள் கணவனுக்கு எதிராகச் சொன்னால் போதும். சட்டம் அவனை நெருப்பாகப் பிடித்துக் கொள்கிறது. அவன் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கடுங்காவல் சிறை தண்டனை கொடுத்து தீர்ப்பளிக்கின்றன நீதி மன்றங்கள்.
இந்தியப் பண்பாடு, மனுதர்ம சாஸ்திரம் என்று காலங்காலமாய் ஆண் வர்க்கம் போதித்து வந்த போதனைகளே, அவளை அடிமைப்படுத்தி வைத்துள்ளன.
'தைத் தகர்த்தெறிந்தால் சமூகப் பண்பாடே காணாமல் போய்விடும். கலாச்சாரமே சீர்குலைந்து போய்விடும்!' என ஓங்கார குரலெடுத்து அலறுகிறது ஆணாதிக்கம்.
ஒரு கொடுமை ஒழிந்தால் தானே அதிலிருந்து தோன்றும் உதிர் கொடுமை அகலும்? வரதட்சணைக் கொடுமை ஒழிந்தால் பெண் கொடுமை ஒழியும். பெண் பெருமைகள் அனைத்தும் போற்றத் தக்கனவாகும். பெண் கொடுமை ஒழிந்தால் சிசுக்கொலைகள் தகர்ந்திடும். இவையெல்லாம் தகர்ந்தால் இந்தியப்பண்பாடு தரணியில் சிறக்கும். இந்தியர் மாண்பு உலகெங்கும் ஓங்கும்! இதை சிந்திப்பதும், செயல்படுத்துவதும் இன்றைய இளைஞர்களின் கையில்தான் இருக்கின்றன. ஏனெனில், நாளைய உலகை ஆளப்போகிறவர்கள் அவர்கள் தானே! அதனையடுத்து கொடுங்கோன்மை சமூகத்தில் அடங்காப்பிடாரித்தனம் செய்யும் வரதட்சணைக்கொடுமை அறவே ஒழியட்டும்.

படைப்பின் ரகசியம் -V.ROHINI

பூமியின் சுழற்சி காற்றாகிறது
காற்றின் வருடல் தென்றலாகிறது
தாயின் பாசம் அமுதாகிறது
அமுதின் அணுக்கள் உயிராகிறது
தந்தையின் நேசம் அறிவாகிறது
அறிவின் சுழற்சி ஆக்கமாகிறது
அன்பின் சப்தம் காதலாகிறது
காதலின் பிரிவு தவிப்பாகிறது
தவிப்பின் உள்ளளி கவிதையாகிறது
கவிதையின் வீச்சு கதையாகிறது
கதையின் ஓசை நாவலாகிறது
நாவலின் ராகம் படைப்பாகிறது
படைப்பின் ரகசியம் பிரம்மனாகிறார்

Wednesday, February 17, 2010

வேகமாக..... வெகு வேகமாக..... -V.ROHINI

நடிகர் பிரபு தேவாவின் மகன் விஷால்-13 வயது ஃபாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிட்டதால் தான் மரணமுற்றார் என்பது சமீபத்திய அதிர்ச்சி செய்தி. உணவு உயிர்வாழத்தான். அது மனித குலத்தை அழிக்கும் உயிரைப் பறிக்கும் பொருளாக மாறிவிட்டால் இந்தப் போக்கை நாம் என்னவென்று சொல்வது? பிரபுதேவா ஒரு நடிகராக-பிரபலமானவராக இருப்பதால் அவர் மகனின் மரணத்திற்கான காரணம் பாஸ்ட் புட் தான் என்ற செய்தி 'ஃபாஸ்ட் புட்'டை விட வேகமான வேகத்தில் பரவி விட்டது. அப்படியானால் வெளியிலேயே வராத பிரபு தேவா மகன்களின் மரணங்கள் எத்தனையோ? இந்த நேரத்தில் 'பாஸ்ட் புட்' அபாயத்தை கொஞ்சமேனும் அறிந்து கொள்வது நல்லது.

பாஸ்ட் புட் என்பதை அதி வேக உணவு வகை என்று சொல்லலாம். நாம் பாரம்பரியமாக தயாரிக்கும் உணவு வகைகளை விட மிகக்குறைவான நேரத்தில் அதை விட கூடுதலான சுவை மற்றும் வண்ண கவர்ச்சியில் (உணவு அழகுபடுத்துதல்-ஈர்த்தல்) கொடுப்பதற்காக அஜினமோட்டோ போன்ற வேதிப் பொருட்களை சேர்த்து தயாரிக்கும் உணவு வகைகளைத்தான் 'பாஸ்ட் புட்' என்கிறார்கள். நாம் சாப்பிடும் 'பிரைடு ரைஸ்' முதற்கொண்டு, சில்லி சிக்கன்-ஜிஞ்சர் சிக்கன், 'ஸ்லைஸ்' எனப்படும் மிக மெலிதான வற்றல் சிப்ஸ் எல்லாம் இவ்வகையை சேர்ந்தவை தான். ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு விதமான வண்ணம் செறிவூட்டப்பட்டு (எல்லாமே வேதியியல் பொருட்கள் மூலம் தான்) யாரையும் கவரக் கூடிய வண்ணம் இந்த உணவு தயாரிக்கப்பட்டிருக்கும் குறிப்பாக இது சிறுவர்களை ரொம்பவுமே கவர்ந்திழுக்கக் கூடியது. இதை சிறு வயது முதல் விரும்பி சாப்பிட்டுத்தான் பிரபுதேவா மகன் விஷால் வெறும் 13-வயதில் புற்றுநோய் தாக்கி மரணத்தை தழுவியிருக்கிறான்.

இந்த உடல் நலத்தை கெடுக்க கூடிய உணவு தேவை தானா? இப்ப ருசிக்க சாப்பிடுவதும் நாம் தான், பிறகு துன்பப்படுவதும் நாம் தானே! இந்த அந்நிய உணவுகளின் ஆதிக்கம் மக்களிடையே தலை விரித்து ஆடுகிறது என்று தான் சொல்லியாக வேண்டும், மக்கள் தற்போது உணவை விட உணவில் கலக்கப்படும் நிறத்திற்குத்தான் மதிப்பு கொடுக்கிறார்கள். இதனை குழந்தைகள்தான் விரும்புகிறார்கள் என்று பார்த்தால், பெரியவர்களும் கூட இதைத்தான் வாங்கி ருசிக்கின்றனர். ஆனால், இதில் ஏற்படும் விபரீதத்தை அறியாமலேயே வியாபாரிகள் மக்களின் மனதிற்கேற்ப நிறத்தை அதிகரித்து வியாபாரம் செய்கின்றனர்.

ஃபாஸ்ட் புட் உணவில் செயற்கை நிறங்களைஅளவுக்கு அதிகமாக கலக்கின்றனர். இது மட்டுமில்லை. சூடான்டை, மெட்டானில் இது போன்ற கெமிக்கல்களை இணைத்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். ஆனால், இன்றோ சிக்கன் 65 போன்ற உணவுப்பொருட்களுடன் தாராளமாகச் சேர்த்து விடுகின்றனர். இதனை சேர்ப்பதால் நிறம் என்னவோ பளிச்சென்று தான் தெரியும். ரசிக்கவும் தூண்டும். அதன் பின்னர் ருசிக்கவும் நம்மை ஆட்படுத்தும். இத்தூண்டுதல் நம் மனதில் எழுமானால் நம் நோய்க்கு நாமே அச்சாணியிட்டது போல் ஆகிவிடாதா? அது மட்டுமா? இதை சாப்பிடுவதால் குடல் கேன்சர். சிறுநீரகக் கோளாறு மற்றும் மரபணுக்களில் கோளாறு என பல கொடிய நோய்களை நாமே விருந்துன்ன அழைத்தது போல் ஆகி விடாதா...?

இது மட்டுமா? சாண்ட்விச்களில் எவ்வளவு கலோரி இருக்கிறது. எந்தளவு கொழுப்பு உட்கொள்கிறோம் என்று அறியாமலேயே பலர் அதனை உண்டு பின்னால் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள். பாஸ்ட் புட் உணவுகளின் மிக முக்கிய எதிர் விளைவு உடல் பருமனை ஏற்படுத்துவதே. வேதிப்பொருட்களை இவ்வகைப் பொருட்களில்தான் கலப்பது என்றில்லை. பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் என்று எல்லாவற்றிலும் கலர் பவுடர், மற்றும் 'எசன்ஸ்' எல்லாம் சேர்க்கிறார்கள்.

அது மட்டுமா? சிலர் உணவில் சுவை கூட்டவும், மணமூட்டவும் 'அஜினமோட்டோ'வை கலக்குகிறார்கள். கடைகளில் மட்டுமல்ல. வீடுகளிலும் கூட பயன்படுத்துவதுதான் கொடுமை. இதனால் ருசியைத்தவிர வேறு எந்த விதமான நன்மையுமில்லை. ஆனால், கேன்சர் மாதிரியான பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது, ப்ளாஸ்டிக் கவரில் வைத்துச் சாப்பிடுவதாலும் கூட கேன்சர் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்பிருக்கிறது. எல்லா பொருட்களிலுமே கலப்படம் வந்து விட்டது.

பார்த்துப் பார்த்து வாங்கி சமைக்கும் உணவுகளிலேயே பாதிப்புகள் இருக்கின்றன. இதிலே கடையில் வாங்குவது எப்படி இருக்கும். கடைகளில் சுவை கூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருள்கள் கலக்கப்படுகின்றன, மசாலா மற்றும் கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். இது சாப்பிடுவதால் உடலில் உள்ள குடலை அரிக்க ஆரம்பித்து விடும். இந்த எண்ணெய் மசாலாக்களை நம் உணவில் அதிகமாக சேர்த்தால் கேன்சர், உணவுக்குழாய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இது மட்டுமா, தற்போது சாலையோர கடைகளில் மாமிசம் சுவையாக இருப்பதற்காகவும், மாமிசம் நன்றாக வேக வேண்டும் என்பதற்காகவும் 'பேராசிட்டமால்' மாத்திரையை கலக்கிறாங்கங்கற செய்திகள் கூட வந்தது, இது, வியப்பிற்குரிய ஒன்றாகவும் இருக்கிறது. இவற்றை உணவில் கலப்பதன் மூலம் தலைவலி, உடல் வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

'பாஸ்ட் புட்' உணவுகளை உண்பது, நாம் மரணத்தை போய் வீடு தேடி அழைத்தது போலாகி விடும் இந்த உணவுகள் தேவை தானா....?